×

ஹெல்மெட் அணியாததால் எஸ்பி நடவடிக்கை தனக்கு தானே அபராதம் விதித்துக்கொண்ட எஸ்ஐ

நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் வெளிப்பாளையம் காவல்நிலையத்தில் எஸ்ஐயாக பணியாற்றுபவர் கனகராஜ். இவர் கடந்த சில நாட்களுக்கு முன் ஹெல்மெட் அணியாமல் பைக்கில் சீருடையுடன் பணிக்கு சென்றார். இதை சிலர் செல்போனில் போட்டோ எடுத்து எஸ்பி ஹர்ஷ்சிங்குக்கு அனுப்பினர். இதையடுத்து எஸ்பி ஓப்பன் மைக்கில் எஸ்ஐயை தொடர்பு கொள்ளுமாறு உத்தரவு பிறப்பித்தார். அதன்படி எஸ்ஐ கனகராஜ், எஸ்பியை தொடர்பு கொண்டார். அப்போது காவலர்கள், அவர்களது குடும்பத்தினர் ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனத்தில் செல்லக்கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அனைவருக்கும் முன் உதாரணமாக இருக்க வேண்டிய காவலர்களே ஹெல்மெட் இன்றி பயணம் செய்வது ஏற்புடையது இல்லை என்றார். இதை கேட்ட எஸ்ஐ கனகராஜ், எஸ்பியின் உத்தரவிற்கு கீழ்பணிவதாக கூறினார். உடனே எஸ்பி ஹெல்மெட் அணியாமல் டூவீலரில் சென்றதற்காக உங்களுக்கு நீங்களே அபராதம் விதித்து, அதை கட்டிய ரசீதை காட்டிவிட்டு பணியில் சேருமாறு உத்தரவிட்டார். இதையடுத்து எஸ்ஐ கனகராஜ் தனக்கு தானே ரூ1000 அபராதம் விதித்து, அபராத தொகையை கட்டினார். அதற்கான ரசீதை நேற்று எஸ்பியிடம் காட்டிவிட்டு பணியில் சேர்ந்தார். இச்சம்பவம் போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post ஹெல்மெட் அணியாததால் எஸ்பி நடவடிக்கை தனக்கு தானே அபராதம் விதித்துக்கொண்ட எஸ்ஐ appeared first on Dinakaran.

Tags : SP Action SI ,Nagapattinam ,Kanagaraj ,Uppalayam Police Station ,SP ,Dinakaran ,
× RELATED நாகப்பட்டினம் சாமந்தான்பேட்டையில்...